வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, November 25, 2016

கணினிப்பொறியாளன்

நான்குக்கு நான்கு சிறு பகுதி
பளபளக்கும் மேசை
சுழலும் இருக்கை சுற்றி தடுப்பு
நடுநயமாக அவன்
ஒளிரும்திரை உலகம்
காணும் உலகம் கணினிக்குள்
கவலையில்லை உலகு குறித்து
கவலையில்லை உலகுக்கும்
கணினிப்பொறியாளன் குறித்து.

#என்அடிச்சுவடு

உன் பார்வை களிம்பு

தீராத வலி
சிறிதும் பெரிதும்மாய் அடிகள்
...
நிற்காத ரத்தம்
இங்கும் அங்குமாய் கிறல்கள்
...
நீங்காத துக்கம்
ஈடு செய்யா இழப்புகள்
...
ஆறி போயின அத்தனையும்
உன் பார்வை களிம்பு
...

#என்அடிச்சுவடு

எண்ணவெளி

அலை அலையாய் நினைவுகள்
அடைவது உன் காலடி.

ஒற்றையடி பாதை நினைவுகள்
எதிரே விலக மறுக்கு.

எண்ணவெளியில் உன் நினைவுகள்
பகலிரவாய் சுற்றி சுழலுது.

நொறுங்கி போயின நினைவுகள்
அசை போட்டு போட்டு.

வார்த்தை தேடிய நினைவுகள்
வாடி வதங்கிப் போயின.

உனை எண்ணியே நினைவுகள்
எழுதியது என்வோ குறைவு.

#என்அடிச்சுவடு

கலையாத நினைவுகள்

உடுத்தும் போது எல்லாம்
கலைந்ததே வந்து போகுது

எத்தனை முறை கலைந்தாலும்
மறுமுறை கலைய தோணுது

மறைத்து மறைந்த எல்லாம்
கலைந்து காண காத்திருக்குது

#என்அடிச்சுவடு

சூதானமா இருக்கனும்

பள்ளிக்கூடம் அனுப்பயிலும்
காலேஸுக்கு கெளம்பையிலும்
வேலையில சேரயிலும்
காதல் கல்யாணத்திலும்
வெளிநாடு போகையிலும்
சூதானமா இருக்கனும்பா
சொல்லும் எங்காத்தா
வெவ்வேற அர்த்தங்களுடன்.

#என்அடிச்சுவடு

தாய் காத்திருக்கிறேன்

காத்திருந்தேன் சிலகாலம்
கருவாகி உருவானாய்.

சூல்கொண்டு சுகம் தந்தாய்.

வழியெல்லாம் விழியாய்
விழித்திருந்தேன்.

வலிகள் மறந்தேன்
வழித்தோன்றலாய் நீ வர.

பாலகனாய் பால்வார்த்தாய்
கால்கொண்டு உலகு அளப்பாய்
காலம்கடந்து நிலைத்திருப்பாய்

செல்லும் இடமெல்லாம்
சான்றோன் என கேட்க
தாய் காத்திருக்கிறேன்.

கல்லூரி நண்பன்

திரை விலகி
AVM எம்பளத்தில் ஆரம்பிச்சு
இரண்டு மணி நேரம்
அன்று நான் பார்த்த சினிமா
கதை சொன்னேன்
சிரிச்சு வயிரு வலிக்கு என்றாய்
வருத்தப்பட்டாய் சோகமான இடத்தில்
ஆச்சிரியத்தில் விழிகள் விரித்தாய்
வணக்கம் வரை பொறுமை காத்தாய்
நான் முடித்ததும் சொன்னாய்
நேற்றே அந்தப்படம் பார்த்து விட்டதாக
ஏன்டா மாப்புள்ள
மொதலையே சொல்லலே என்றதற்கு
ஆர்வமா சொன்ன தடுத்தா
உன் மனசு கஷ்டப்படும் என்றாய்
இன்று கஷ்டமா இருக்குடா மாப்புள்ள
உன்னைப்போல் ஒருத்தனை
அப்புறம் பார்க்கவில்லை என்று.

#என்அடிச்சுவடு

தமுக்கு

களவோ கன்னமோ
வாயத் தகராறோ
வாயக்காத் தகராறோ
வரப்பு சண்டையோ
வெட்டு குத்தோ
ஊரக்கூட்டனுமா
ஒடனே கூப்புடுவாக
தமுக்கடிச்சு சாட்டி
ஊர்முழுக்க வெவரம் சொல்ல

கல்யாணமோ காதுகுத்தோ
செய்மொறைக்கு கூப்பிட
வராத செய்மொறைய வசூலிக்க
தமுக்கு அடிச்சு சொல்வேன்

ஒத்துவராம அத்துவிட்டது
எலவு கருமாதீ எதுவானலும்
மொத்த ஊருக்கும்
மொதல தெருமுக்குள்ள
கத்தி கத்தி சொல்வேன்

கம்மாதண்ணி தொறக்க
கம்மா மீன் அரிக்க
சாமி சாட்ட
சாமிமாடு ஐல்லிகட்டுக்கு
ஊர்வலமா கூட்டிப்போக
எல்லாத்துக்கும் தமுக்கடிக்கப்பேன்

ஆறு நாளா அடுப்பு எரியல
களப்புகடைக்கு போனா
தனியா டம்ளர்
காப்பி குடிக்க மனசில்ல
யாருகிட்டயும் தமுகடிக்க
தன்மானம் எடந்தல்ல

#என்அடிச்சுவடு

பிடிச்ச சட்ட

எட்டுப்பட்டி திருவிழா
எல்லா ஊருல இருந்தும்
சாமி சப்பரம்
தீசட்டி கரகம்
மொளப்பாரி மாவெளக்கு
தேவராட்டம்
ஊருவலமா வர
ஊரே அல்லோப்படும்
அத்திபட்டி கோயில்ல.

பொறப்பட்டு பொகனும்
பொழுது சாய்றதுக்குள்ள
தொவச்ச துணி இன்னும் வல்ல
இருப்பு கொள்ளல எனக்கு.

ஊருத்துணியெல்லாம் தொவைக்கனும்
ஒத்தாளு எத்தன கையிருந்தாலும்
பத்தாது பாவம் ஏகாலி.

கரம்பமண் வெள்ளாவிலவச்சு
கஞ்சிபோட்டு தேச்சு மடிப்புகளையாம
கொண்டுவரும் அழகுக்கு செத்தநேரம்
காத்திருந்த தப்பில்ல.

ஆத்தா கண்டாங்கிசேலையில கட்டி
தேப்பு துணிமூட்ட வந்திருச்சு
அப்பனோட வெட்டி சட்ட கலையாம
என்னத துண்டா தனியா எடுக்கனும்
இல்லன்னா அப்பா அடிப்பாக.

புடுச்ச சட்ட வல்ல
எங்க போயிருக்கும எனக்கு புடுச்ச சட்ட
ஏகாலி படிக்காதா அறிவாளி
ஒவ்வொரு வீட்டுக்கும் ஓர் அடையாளம்
எங்கவீட்டுக்கு எட்டுப் போல ஒன்னு
மாறி மத்த வீட்டுக்கு போக வழியில்ல
இருந்த சட்ட ஒன்ன எடுத்து
போட்டுக்கிட்டு கெளம்பிட்டேன்.

திருவிழாக் கூட்டத்தில
யென்சோட்டு பையன் ஏகாலி மகன்
எனக்கு பிடிச்சி சட்டயை போட்டுகிட்டு
அதக்காட்டி பெருமையா ஏதோ
சொல்லிக்கிட்டு இருக்க
பக்கதில போனா பாவம் அவன் மனசு
குறுகிப் போகும்ன்னு திரும்பி
திருவிழா கூட்டத்தில நடந்தேன்.

#என்அடிச்சுவடு

வழித்துணை

ஒற்றையாய் பயணம்
ஓர் சந்திப்பில்
பார்த்துக் கொண்டோம்
பழகி பயணப்பட்டோம்
உடன்படிக்கை இல்லை
கை கொடுத்தாய்
கை தட்டினாய்
ஆச்சரியங்கள் அள்ளிதந்தாய்
விருப்பங்கள் வேறு வேறாயின
திருப்பத்தின் முடிவில்
பாதை பிரிந்தது வேறு வேறாய்
பயணம் மட்டும் தொடருது
முடிவில் பார்த்துக் கொள்வோமா?
நிச்சயம் நினைத்துக் கொள்வோம்.

#என்அடிச்சுவடு

பால் வேறுபாடு இல்லாமல் இருவருக்கும் பொருந்தும்படி எழுதியது. இன்று இது கமல் கௌதமியின் பிரிவை ஞாபகப்படுத்தினாலும். பின்னர் பிரிந்த நட்பு, காதல், உறவு குறித்து இருக்க வேண்டும் என்று பாடுபொருள் உட்பொருளாக எழுதியது.

சொல்லாத சொல்

சொல்லிய சொல்லினும்
சொல்லாத சொல்லே
அடைந்து கிடக்குது
அடர்ந்த அர்த்தங்களாய்
என்றும் எனக்கு மட்டுமாய்
ஆழ்மனதின் அடியில்.

#என்அடிச்சுவடு

மரணம்

வலிகள் நிறைந்ததல்ல
மரணம்
மற்றவர்களின் மனங்களில்
மரித்தவனுக்கு.

#என்அடிச்சுவடு

இருந்தா நல்லா இருக்கும்

எதிர்பார்பில்லா அன்பு
காமமில்லா காதல்
சத்தமில்லா முத்தம்
முரணில்லா திருமணம்
உடன்படிக்கையில்லா உறவு
அளவுக்கதிகமில்லா செல்வம்
சண்டையில்லா சமாதனம்
கேள்வில்லா அமைதி
இல்லை என்றில்லை
இருந்தா நல்லா இருக்கும்.

#என்அடிச்சுவடு

ஆயிரம்

மாசக்கடைசியில் பலமுறை
மன்றாடி இருக்கிறேன்.
அன்பளிப்பாக வந்தது
அப்பா தந்தது
தோழி ஞாபகம்
குலசாமி உண்டியல்
ஆயிரம் காரணம் சொல்வாள்.
மதிப்பு மாறாமல்
திருப்பி தருவதாய்ச் சொன்னாலும்
அது வேற இது வேற என்பாள்.
இன்று அத்தனையும்
மாற்றச் சொல்லி
மன்றாடிக் கேட்கிறாள்.

செல்லாக்காசு

ஆசை ஆசையாய்
ஆயிரங்கள் இருந்தது
உன்னிடம் பரிமாற
என்னிடம்.
ஓர் இரவு
ஓர் வார்த்தை
செல்லாக்காசாக
இன்று நான்.

வழக்கு எண் 18/9 மீள் May 11, 2012

படம் நாயகியின் பார்வையில் தொடக்கி பார்வையில் முடிகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் கதாபாத்திரத்தின் வழியாக பார்ப்பது.

கதையின் நாயகி மொத்தம் பேசும் வசனங்கள்

"அதன் சொல்றேன்லே... எனக்கு யாரையும் தெரியாது"
"அம்மா மோதிரம் "
"அம்மா சர்ப் தீந்திருச்சு"
"அம்மா காப்பி வேணுமா"
"பொருக்கி "
"எனக்கு ஒரு தம்பி இருந்த பாத்துக்க மாட்டேனா"

ஆனால் அவளின் உணர்வுகளை அழகா காட்சிகளில் விளக்கியிருப்பது அழகு.

இரு கதையும் வகிடு எடுத்து அம்மா சடை பின்னியது போல் இயல்பாய் இணைவது தனி அழகு.

காலத்துக்கு தேவையானதை காலத்தே கொடுத்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில் இதுவரை வந்த தமிழ் திரைப்படங்களின் முதன்மையான படம் என்பேன் .

தமிழ் திரைப்படங்களின் வழக்கு(களையும்) எண்(ணங்களையும்) புரட்டி போட்டிருக்கிறது வழக்கு எண் 18/9.

கமல் vs ஹாசன் (மீள் Jan 05, 2013)

கமலும் சர்ச்சைகளும் கூடவே பிறந்தது. கமல் பார்க்காத சர்ச்சைகள் கிடையாது. அதில் ஒன்று கமல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று. முதலாவதாக கமலின் பாதி பெயர் முஸ்லிம் பெயர். கமல் ஒரு முறை அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் ஹாசன் என்ற பெயர் காரணமாக தடுத்து நிறுத்தப் பட்டார். அவர் நினைத்திருந்தால்  தன் பெயரை கடவு புத்தகத்திலாவது மாற்றி இருக்கலாம். இல்லை இன்றும் அவர் கமல் ஹாசன் தான்.

கமலின் முஸ்லிம் ஆதரவு அவரின் படங்களில் இருந்து  இங்கே.

1. குருதி புனல்

இதில் வரும் ஆதி (கமல்) அப்பாஸ் (அர்ஜுன்) கதாபாத்திரங்களில் அப்பாஸ் என்ற முஸ்லிம் கதாபாத்திரம் தான் கடைசிவரை நல்லவனாகவே இருந்து இறப்பார். கதையின் நாயகன் ஆதி கூட குடும்பத்திற்காக தீவிரவாதிக்கு உதவ சம்மதித்து பின் திருந்துவது போல் காட்டியிருப்பார்.

2. அவ்வை சண்முகி

இதில் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரமாக பாட்ஷா (நாசர் ) என்ற முஸ்லிம் தான் வருவார். அவனாவது வயித்து பொழப்புக்கு மாடு வெட்டுறான் ஆனா நிங்க அதோட தோல எடுத்து ஏற்றுமதி பண்ணுரிங்க. அவன் வெட்டுற மாட்ட விட நிங்க வெட்டுற மாடுதான் அதிகம் என்று ஒரு அய்யர் கதாபாத்திரத்தை பார்த்து பாண்டி (கமல்) பேசுவது போல் அமைத்து அந்த அய்யர்(ஜெமினி) திருந்துவது போல் காட்சி அமைத்திருப்பார்.

3. ஹே ராம்

இதில் இரு முக்கிய முஸ்லிம் கதாபாத்திரங்கள் (காவல் துறை அதிகாரி - நாசர் , மருத்துவர் - அப்பாஸ் ) கலவரத்தில் சாகேத் ராம் (கமல்) காப்பாற்றுவது போல் காட்டியிருப்பார். பிரிவினை வாத கலவரத்தில் மனைவியை இழந்த ராம் தீவிரா வாதியாக மாறுவார் பின் திருந்துவார். ஆனால் அஜ்மத் (ஷாருஹான்) என்ற முஸ்லிம் கடைசி வரை நல்லவனாகவே இருப்பார் மற்றும் ராம் திருந்துவதற்கு முக்கிய காரணமாக இருப்பார்.

4. தசாவதாரம்

இதில் வரும் பத்து பாத்திரத்தில் கலிபுல்லா என்ற முஸ்லிம் மிக நல்லவராக எல்லாருக்கும் உதவுவராக காட்டியிருப்பார்.

5. உன்னை போல் ஒருவன்

இதில் வரும் காவல் துறை அதிகாரியாக ஆரிப்கான் நல்லவராகவே வருவார். இன்னும் சொன்னால் comman-man ஒரு முஸ்லிம் போல் தான் சித்தரித்திருப்பார்.

கடைசியாக விஸ்வரூபத்திற்கு வருவோம்

முன்னோட்ட காட்சியில் இருந்து

1. சமாதான புறா மசூதியின் மேல் இருப்பது போல் வருகிறது. முஸ்லிம் சமாதானத்தை உயர்த்தி பிடிப்பது போல் வருகிறது.
2. அதே சமாதான புறா wall street - ன் எருதின் காலடியில் (stock exchange) இருப்பது போல் வருகிறது. அமெரிக்கா உலக சமாதானத்தை அதன் பொருளாதரத்தின் காலடியில் தான் வைத்திருகிறது என்பதுபோல் வருகிறது.
3. பாடலில் டாலர் உலகில் சமதர்மம் கிடையாது என்று வருகிறது.

so, கமல் ஒருவர் சார்ந்து எடுத்திருக்க மாட்டார். நிச்சயம் முஸ்லிம்களை சாடி எடுத்திருக்க மாட்டார் என்று நம்புவோமாக !!!

மகன்வகுத்து பேரன்

ஊருலயே பெரிய சாவு
தெருவ அடைச்சு கொட்டக

மல்லப்பர கொட்டுக்காரன்
அல்லிநகர ஆட்டக்காரன்

ஏழெட்டு மையில் தொலவுஊர்
சொந்தமெல்ல வந்திருச்சு
எலவு மரக்கா சேலயோட

உள்ளுரு கொட்டுக்காரன் ஊர்வலமா
கூட்டிவாரான் வெளியூருகாரங்கள

எலவு மரக்கா தானியம் கொட்ட
தனித்தனியா சாக்குப்பை

செய்மொற சேல தொங்கப்பொட
ஒவ்வொரு மருமகளும் அவ அவளுக்கு
தனியா தனியா கொடிக்கயிறு

கெழவிய குளுப்பாட்டிக்கட்ட
வெள்ளாவியில வெகவச்ச சேல

எள்ளுப்போட  எடமில்ல
திரும்புற பக்கமெல்ல சனங்க

ஊரே கூடிக்கூடி குசுகுசுன்னு பேசுது
கட்டிஅத்துவிட்ட மகன்வகுத்து பேரன்
நீர்மால எடுக்க எப்ப வருவான்னு

#என்அடிச்சுவடு

சும்மா சொல்லிட்டேன்

பங்குனி பொங்க பாக்க
குடும்பத்தோட வாடான்னு
ஆத்தா ஆசையா வந்து
கூப்புட்டுச்சு.

மொதநா
சாமிகரகம் மொளப்பாரி
அடுத்தநா
மாவெளக்கு தீச்சட்டி
கடேசிநா
கெடவெட்டு சாமி கரைக்குறது
எல்லாத்தையும் ஒன்னுவிடாம
பாக்கனும் போல இருக்கு.

கூடப்படிச்ச சோட்டுக்காரபுள்ள
படும்பாடு பாக்க பொறுக்காம
வேலயிருக்குமா வல்லன்னு
சும்மா சொல்லிட்டேன்
இந்த வருசமும்.

#என்அடிச்சுவடு

#பொய்சொல்லிட்டேன்

#சும்மாசொல்லிட்டேன்

இதே கவிதையை  #பொய்சொல்லிட்டேன் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன். இது வட்டார வழக்கில் #சும்மாசொல்லிட்டேன்  .

பொய் சொல்லிட்டேன்

பங்குனித் திருவிழா
பார்க்க குடும்பத்தோட வாடா
அம்மா ஆசையோட
அழைத்தாள் போனில்.

முதல்நாள்
சாமிகரகம் முளைப்பாரி
அடுத்தநாள்
மாவிளக்கு தீச்சட்டி
கடைசிநாள்
கிடாய்வெட்டு சாமிகலக்கல்
எல்லாம் பார்க்க
எனக்கும் ஆசைதான்.

பள்ளிக்கூடத்தில் கூடப்படித்த
பாவிப்பயமகள் படும்பாடு
பார்க்க பிடிக்காமல்
வேலையிருக்கும்மா வரமுடியாது
பொய் சொல்லிட்டேன்
இந்த வருடமும்.

#என்அடிச்சுவடு

#பொய்சொல்லிட்டேன்

#சும்மாசொல்லிட்டேன்

Thursday, September 29, 2016

இல்லாமல் இல்லை

சோகம் சொல்லில் இல்லை
சொல்வதில் உண்டு.
கவலை கோபத்தில் இல்லை
கொள்வதில் உண்டு.
போதம் அம்பில் இல்லை
பாய்வதில் உண்டு.

#என்அடிச்சுவடு

விழுதுகள்

எங்கு சென்றாலும்
எங்கு இருந்தாலும்
இன்னும் நான்
ஒரு கிராமத்தான்.

ஒட்டிய புழுதியில்ல
ஓடும் ரத்தம்.

கிளைகள் பரவி எங்கே
விரிந்தாலும்
வேர்கள் எப்போதும் அங்கேயே.

விழுதுகள் எல்லாம்
வேர்களை தேடியே!!!

#என்அடிச்சுவடு

முடிந்தும் முடியாத

மறைந்த சூரியன்
மனசுக்குள் வெளிச்சம்.

கடந்த ரயில்
காதுக்குள் தடக் தடக்.

நின்ற மழை
நிற்காத தூறல்.

முடிந்த காட்சி
முடியாத பிம்பம்.

விலகிய சொந்தம்
விலகாத உறவுமுறை.

பிரிந்த நண்பன்
பிரியாத நட்பு.

முறிந்த காதல்
முறியாத சோகம்.

#என்அடிச்சுவடு

கோலமகள்

கனவில் புள்ளிவைத்து
நினைவில் கோலமிட்டு
நிசத்தில் கலைந்தாள்
அவள்.

#அடிச்சுவடு

அணைவரும் குற்றவாளி

ஞாபகப்பையில்
தியாகம் ஓடியாடி சேர்ப்பாள்.
நிரம்பி பை
நடுவீட்டில் வழியும் ஒர்நாள்.
வக்கில் நீதிபதி
அன்று அவள் தான் எல்லாம்.
மற்றவர்கள்
குற்றவாளி கூண்டில் வாய்மூடி.
தண்டனை வாசிப்பாள்
ஆனால் அமுல்படுத்தமாட்டாள்.
அணைவரும்
இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவர்.
மறுபடியும்
தியாகம் தேடி ஓடி நிறைய சேர்ப்பாள்
ஞாபகப்பையில் அம்மா.
மற்றோர் நாளில்
தியாகம் நிரம்பி நடுவீட்டில் வழிய
அணைவரும்
எதுவும் செய்யாமல் காத்திருப்பர்
குற்றவாளியாக அன்றும்.

#என்அடிச்சுவடு

வலிந்த கணவன்

பாத்திரங்கள் அலம்பி
அடுக்களை ஒதுங்கி
படுக்கை விரித்தாள்.
அத்தை இரும்பி அழைக்க
சுடுசுக்குதண்ணி கொடுத்தாள்.
வலிந்த கணவன்
உறவாடி பின் உறங்கினான்.
பசியில் அழும் குழந்தை
பாலூட்டி பசி அமர்த்தி
அயர்வா சிறிதே கண்மூடினாள்.
காதுக்குள் பால்க்காரன் மணிச்சத்தம்.
தலையணை துலாவி
வெளிக்கதவுசாவி எடுக்க
குறட்டை கலைய எறிந்து விழுந்தான்
முன்னிரவில் வலிந்த கணவன்.

#என்அடிச்சுவடு

Sunday, September 25, 2016

நீ எனதானால்

எங்கிருந்தாய் இதுவரை
ஏன் வந்தாய் என் முன்னே
என் இருப்பை தொலைத்தேன்
புதிதாய் பிறந்தேன்
உன் புன்னகையில்.
உலகின்
முதல் கெட்டவன்
கடைசி நல்லவன்
அதுபற்றி கவலையில்லை
உன் புன்னகைக்காக போரும்
செய்யத் தயார்
நீ எனதானால்.

#என்அடிச்சுவடு 

ஆண்மனம்

அம்மா எனில்
வைராக்கியகாரி.
மகள் எனில்
கெட்டிக்காரி.
அக்கா எனில்
வீம்புக்காரி.
மனைவி எனில்
திமிருக்காரி.
பிடிவாதம் செயல் ஒன்றே
வெவ்வேறாய் அர்த்தம் கொள்ளுது
ஆண்மனம் !!!

#என்அடிச்சுவடு

வலி

வார்த்தை கிடைக்காமல்
................................
வரிகளுக்குள் இடம்
.........................
விட்டு நிரப்புகிறேன்
.........................
வாசிக்கும் உன்னை
..........................
வந்து அடையும்  என்
..........................
வலி என்று.

#என்அடிச்சுவடு

கரிசல்காட்டு மக்கள்

தடித்த தேகம்
காய்த்த தோல்
கருத்த நிறம்
கண்டிய கைகள்
காய்த்த விரல்கள்
முறுக்கு மீசை
முரட்டு பார்வை
அன்பு பாசம்
விருப்பு வெறுப்பு
பக்தி பரவசம்
கோபம் தாபம்
எல்லா உணர்வையும்
ஆக்ரோசமாக மட்டும்தான்
காட்ட தெரியும்
கரிசல்காட்டு வெள்ளேந்திக்கு

#என்அடிச்சுவடு

நித்தம் வேண்டும் நீ

மௌனமாய் ஓர் யுத்தம்
யுத்தத்தில் உன் சத்தம்
சத்தமில்லா உன் மௌனம்
மறுபடியும்
மௌனமாய் ஓர் யுத்தம்
...   ...   ...   ...   ...   ...
யுத்தமோ? மௌனமோ?
நித்தம் வேண்டும் நீ.

#என்அடிச்சுவடு

வாதாடிய வக்கில் பாவம்

ஒளி மலரா சேர்க்கை
செயற்கையா மலர்ந்த விவாதம்
சாட்சி வைக்கா சமாதானம்
சாட்சி வைத்து சண்டை
சண்டை சொல்ல சாட்சி
சாட்சி சொன்ன பொய்
சாட்சி சொல்லா உண்மை
உண்மையில் உள்ள பொய்
பொய்யில் உள்ள உண்மை
உனக்கும் எனக்கும் தெரியும்
வாதாடிய வக்கில் பாவம்.

#என்அடிச்சுவடு

ஒருநாளும் போகலை

ஊத்துன மஞ்சத்தண்ணி
தேய்ச்ச ஒட்டுபுல்லு
அடுத்தநா போயிருச்சு
உசுரோட ஒட்டுனநெனப்பு
ஒருநாளும் போகலையே.

#என்அடிச்சுவடு

சத்தமும்.... முத்தமும்...

காதலாய் முத்தமிட்டேன்
கோபமாய் சத்தமிட்டாள்
காதலியாய் அன்று.

கோபமாய் சத்தமிட்டேன்
காதலாய் முத்தமிட்டாள்
மனைவியாய் இன்று.

#என்அடிச்சுவடு

Tuesday, September 20, 2016

அப்பா பிள்ளை

விதை உனது
விருச்சம் எனது
***
வேர் உனது
விழுது எனது
***
உழைப்பு உனது
உயர்வு எனது
***
கனவு உனது
நிகழ்வு எனது
***
இலக்கு உனது
வெற்றி எனது
***
பாதை உனது
பயணம் எனது
***

#என்அடிச்சுவடு

நீ எனதானால்

எங்கிருந்தாய் இதுவரை
ஏன் வந்தாய் என் முன்னே
என் இருப்பை தொலைத்தேன்
புதிதாய் பிறந்தேன்
உன் புன்னகையில்.
உலகின்
முதல் கெட்டவன்
கடைசி நல்லவன்
அதுபற்றி கவலையில்லை
உன் புன்னகைக்காக போரும்
செய்யத் தயார்
நீ எனதானால்.

#என்அடிச்சுவடு

ஆள்வவன் நினைத்தால்

தலைப்பை கட்டம்கட்டி பெட்டியாக்க
மற்றோர் தலைப்பு
உருவாக்கம் செய்யப்படுகிறது.
***
பெரிதை சிறிதாக்கி புறந்தள்ள
மற்றோர் சிறிது
மடைமாற்றி பெரிதாக்கப்படுகிறது.
***
சம்பவம் மறைக்க மறக்க
மற்றோர் சம்பவம்
தற்செயல்போல் நிகழ்த்தப்படுகிறது.
***
மணியோசை முன் எழுப்பி
மற்றோர் யானை
பின் ஒழிக்கப்படுகிறது.
***
எளியவனை பலிகடா ஆக்கி
மற்றோர் வலியவன்
படையலில் படைக்கப்படுகிறது.
***
பசித்தவனுக்கு பந்தி போட்டு
மற்றோர் பூசனிக்காய்
சோற்றுக்குள் பரிமாறப்படுகிறது.
***
சாத்தியமே சத்தியமாய் சாத்தியமே
அத்துணையும் சாத்தியமே
ஆள்வவன் நினைத்தால்.
***

#என்அடிச்சுவடு

Sunday, September 18, 2016

எங்கோ வாழ்கிறார்கள்

உயிருக்கு உயிருராய்
காதலித்தார்கள்.
நண்பர்கள் சூழப் பதிவு
செய்து கொண்டார்கள்.
ஒரே கலரில் சட்டை
போட்டார்கள்.
ஒருவருக்கு ஒருவர்
விட்டுக்கொடுத்தார்கள்.
அன்பான அடைமொழியில்
விளித்து கொண்டார்கள்.
ஆண் நண்பர்கள் அவள்போல்
மனைவிக்கும்
பெண் நண்பிகள் அவன்போல்
கணவனுக்கும் பிராத்தித்தார்கள்.
ஒரு நல்ல நாளில் நண்பர்கள்
தொடர்பு எல்லைக்கு
வெளியே போனார்கள்.
எந்த சமுகவலைதளங்களும்
எங்களுக்கு உதவவில்லை.
எங்கு தேடியும் இன்றுவரை
அவர்கள் கிடைக்கவில்லை.
எங்கள் நண்பர்களை பொறுத்தவரை
அவர்கள் மட்டுமே காதலர்கள்.
எங்கோ குடும்பமாய் வாழ்கிறார்கள்.

#என்அடிச்சுவடு

தற்கொலை

விக்னேஷ்
சிலநாட்கள் இன்னும்
செய்திகளில்  தென்படப்போகும்
பெயர்.
விவாதங்களில் அடிபடப்போகும்
பெயர்.
வலை முகப்புகளில் பகிரப்போகும்
பெயர்.
அன்று மொழியின் பெயரால்
பத்துக்கு மேல்
நேற்று இனத்தின் பெயரால்
நூற்றுக்கு மேல்
இன்று ஆறின் பெயரால்
நீ.
விதைப்பது நீங்கள்
அறுவடை செய்வது என்னவோ
அரசியல் கட்சிகள்.
தமிழா....
எங்கே கற்றுக்கொண்டாய்?
நாளை எதன் பெயரால்
நிகழ்த்த போகிறாய்?
வேண்டாம் இனி எதன் பெயராலும்
தற்கொலை.

#என்அடிச்சுவடு

#என்காவேரி

Wednesday, September 14, 2016

முருங்கை

கொல்லை முருங்கைக்கு
கொள்ளை என்ன வந்தது
காய்ப்பதை நிறுத்தி கொண்டது
ஊரில் அவன் இல்லாதபோது

மனிதம் மாண்டது

அவரவர் தனித்தன்மை
ஏது என்றோம்?
இனம் என்றாய்
மொழி என்றாய்
சிறிய சிறிய
கோடு போட்டாய்
ஏன் என்றோம்?
ஆள வசதி என்றாய்
கோடுகளை சேர்க்க
பெரியகோடு போட்டாய்
எதுக்கு என்றோம்?
வேற்றுமையில் ஒற்றுமை
அதுக்கு என்றாய்
நானும் அவனும் நம்பினோம்.
ஆள வந்தாய்
அரசியல் செய்தாய்
இனம்
வேறுபாடு கற்பித்தாய்
மொழி
பிரிவினை வளர்த்தாய்
கோடு
அவனவன் எல்லையாக்கினாய்
தனித்தன்மை
வேற்றுமை ஆனது
சிறிய கோடுகள்
பெரிய கோடானது
அரசியல் ஊற்றி வளர்த்தாய்
நதி பிரிந்தது
நீர் மடைமாறியது
நதி மடலானது
நஞ்சை தாரானது
அடுப்பு அணைந்தது
வயிரு எரிந்தது
மானமுள்ளவன் இறந்தான்
ரோசமுள்ளவன் எதிர்த்தான்
எதிர்த்தவனை அடித்தான்
அடிபட்டவனும் அடித்தான்
மனிதம் மாண்டது
போர் மூண்டது.

மனிதம்?

நீரின்றி அமையாது உலகு
உலகின்றி நீர் அமையுமா?
உயிர் வாழ நீர் வேண்டும்
நீர் வாழ உயிர் வேண்டுமா?
பயிர் வாழ நீர் வேண்டும்
நீர் வாழ உயிர் வேண்டுமா?
நீரிட்டு உயிர் வளர்த்தாய்
தீயிட்டு எதை வளர்ப்பாய்?
நீர் விட்டு நேசம் சேர்த்தாய்
உதிரம் விட்டு எது சேர்ப்பாய்?
அணை வெட்டி நீர் தேக்கினாய்
எனை வெட்டி எதை தேக்குவாய்?
அவர்கள் அடித்தார்கள்
நாங்கள் அடிக்கிறேம்...
அவர்கள் எரித்தார்கள்
நாங்கள் எரிக்கிறேம்...
என்ன ஆனது மனிதம்?
போதும் வேண்டாம் இனியும்.
வீழ்வது எதுவாயினும் இருக்கட்டும்
வாழ்வது மனிதமாக இருக்கட்டும்.

மழலை வரம்

வருடங்கள் சில ஓடிவிட்டன.
இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்த 
விசாரிப்புகள் இப்பொழுதெல்லாம்
அம்மாவின் பிராத்தனை
நாத்தனாளின் ஏளனம்
நட்பின் தேற்றல்
சொந்தங்களின் பரிகாசம்
அக்கம்பக்கதின் பொறனி
மாமியாரின் எல்லாமுமாய்
பரிணாமித்து பல்கிபெருகி
இலக்கின்றி எய்த
குற்றவாளியே சாட்சியாக
இலக்கு நான், குற்றவாளி
கூண்டில் ஏற்றப்பட்டிருக்கிறேன்.
ஆலமரம்
ஆஸ்பத்திரி
ஜோஸியம்
பரிகாரம்
என தனியே அலைகிறேன்
மலடி சொல் கேளாமல்
மழலையை வரங்களாக வேண்டி!!!

மன வாசனை

நித்தம் சந்திக்கும் காபிஷாப்
அதே மூலையோர மேசை 
எதிரெதிராய் அவனும் அவளும் 
இரண்டு பக்கமும் மௌனம்
பரிசுகள் இடம்மாறின உணர்வுகளற்று
கடிதங்கள் ஒன்றொன்றாய் கிழித்தான்
வாழ்த்துஅட்டை பார்க்காமல் அழித்தாள் 
கைகுலுக்காமல் விடைபெற்று 
வீதியில் இறங்கி நடந்தனர்.
எதிர்பாராத மழை எங்கிருந்தோவர 
இருவர் மனதிலும் சந்திப்புகளின்
வாசனை.

Monday, September 12, 2016

காத்திருப்பு

இது என்கடைசி மூச்சு 
சக்தியெல்லாம் ஒன்றுதிரட்டி  
உயிரையை  சில வினாடி நிறுத்தி 
கண்களால் தேடினேன் 
வெளிநாடு போன மகன் 
இன்னும் வந்து சேரவில்லை. 
இறந்து இரண்டு நாள் ஆகிறது 
காத்திருக்கிறேன் அவனுக்காக 
காடுக்காவது  வருவான் என்று.

Saturday, September 10, 2016

கடைக்கண்

இல்லாமல் இருக்கும்
இடையில் சிக்கி
விலக மறுக்குது
விழிகள் இரண்டு
கடைக்கண் காட்டி
கரையேற்றி விடுவாயா?

Friday, September 9, 2016

மூக்குத்தி

கண்ணே காணமுடியவில்லை 
மை இருட்டு
முகத்தை கொஞ்சம் திருப்பு 
மூக்குத்தி வெளிச்சத்தில் 
முன்னேறி வருகிறேன் 
முத்தம் ஒன்னு தர.

கார்ப்பேரெட் காடு

புழுக்கம் தாளவில்லை 
தாகம் தீரவில்லை 
எங்கும் கானல்நீர்
மூச்சு முட்டுகிறது
விழி பிதுங்கிறது 
நரிகள் நிறைந்த காடு 
எங்கும் கார்ப்பேரெட் காடு
திக்கு தெரியவில்லை 
திரும்ப வழி புரியவில்லை 

கண்டு கொன்றார்

அவன் அவளை
கண்டு கொண்டான்
அவள் அவனை
கண்டு கொண்டாள்
அப்பா அவர்களை
கண்டு கொன்றார்

இதழாள்

வாசித்ததில் 
நேசித்தது
இசைந்து 
அவள் தந்த
இதழ்கள்.

Thursday, September 8, 2016

மல்லிகை

அவன் ஊரில் இல்லாதது 
பூக்காரிக்கு கூட புரிந்திருக்கிறது 
மல்லிகை சரம் வைக்காமல்
கதம்பத்தை மட்டும்
கதவில் மாட்டிவிட்டு
போயிருக்கிறாள் சாமிக்கு.

Thursday, September 1, 2016

விதை நெல் - நெல் நான்கு




விதை நெல் - நெல் மூன்று

தலையில் சும்மாடு அதுக்குமேல கூழ்ச்சட்டி இடுப்பில் நார்ப்பெட்டி  நிறைய வெதைத் தானியம் மறுகையில் கன்னுக்குட்டியும் பிடித்துக் கொண்டு புளிமூட்ட மாமா  பின்னாடி கொஞ்சத்தூரத்தில் நடந்து வந்தார் செவனம்மா அத்தை.  

தலையில் கூழ்ச்சட்டி எந்த பிடிமானமும் இல்லாமல் செவனம்மா அத்தை நடந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

நான் எழுந்து என் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு எங்க தோட்டத்தை நோக்கி நடந்தேன். என்னைப்பார்த்த அத்தை பாதையில் இருந்து சிறிது விலகி எனக்கு வழி விட்டு நடந்தாங்க.

"குதுரவள்ளி வெதைக்க போறீங்களா  அத்த" என்றேன்.

"ஆமாம்.... மருமகனே..."  மருமகனே என்னு சொன்னது அவங்களுக்கே கேட்டு இருக்காது அவ்வளவு மெதுவா தலையக்கூட நிமிராமல் கன்னுகுட்டியை பார்த்துக்கொண்டே பதில் சொன்னாங்க. பெறந்த குழந்த கூட அது மருமகன் முறை என்றால் எங்க ஊர் பொம்பளைங்க  கொடுக்கும் மரியாதை எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கும்.

தம்பியை இடுப்பில் தூக்கிக்கொண்டு ரெண்டு ஆட்டுக்குட்டிய விரட்டிக்கிட்டு "ஆத்தா... மெதுவா போ..." என்று கத்திக்கொண்டே வேகமாக நடந்து வந்தா ஒன்பது வயது மதிக்கத்தக்க அத்தமக.  

நான் அவளை வழி மறித்து நின்றேன்.

"மாமா... வழிவிடுங்க நான் போகனும்" என்றாள்.

"உன் பேரு என்னன்னு சொல்லு... நான் வழி விடுறேன்" என்றேன்.

"செங்கனி" என்றாள்.

"நல்ல பேரு... உன் பேருக்கு என்ன அர்த்தம் ?" என்று வம்புக்கு இழத்தேன்.

"செம்மை கூட்டல் கனி" என்றாள்.

அவள் சொன்ன பதில் எனக்கு ஆச்சரிமாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உணர்வுகளை காட்டிக்கொள்ளாமல் " என்ன படிக்குற..." என்றேன்.

"இப்ப பள்ளிக்கூடம் போகல... நாலாவதோட நின்னுட்டேன்... ஆத்தா வேணாம்னு சொல்லிட்டாங்க... " என்றாள்.

எனக்கு தூக்கிவாரி போட்டது.

"பொம்பளப்புள்ள படிச்சு என்ன பண்ணப்போகுது... அதேன் எதுக்குன்னு நிறுத்திட்டோம்..." என்றார் அத்தை.

"அப்படி எல்லாம் சொல்லாதிங்க அத்த... " என்றேன் வருத்தமாக.

"கூடமாட இருந்து வீட்டு வேல தோட்ட வேல கத்துகிட்டா போற இடத்துல ஒத்தாசைய இருப்பா அதான்...  தம்பி..." என்று இழத்தார் அத்தை.

"பார்த்தா நல்லா படிக்குற பொண்ணு மாதரி இருக்கா... வீட்டுல பொண்ணுங்க தான் படிக்கனும்... அப்பதான் அவங்க பிள்ளைங்க படிக்க உதவியா இருக்கும்" என்றேன். அப்போது ஏனோ குடும்பவிளக்கு பாரதிதாசன் என் நினைவில் வந்து போனார்.

"ஆமாப்பா ஓட்டத்துல கூட மொத இடத்துல வந்து இருக்கா... அவங்க வகுப்புலயே இரண்டாவதாம்" அத்த கண்ணில் ஒரு சிறிய பெருமை வந்து போனதை கவனித்தேன்.

"பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க அத்த..."  என்றேன் சிறிது கெஞ்சலாக.

"எங்க அப்பா கூட பள்ளிக்கூடம் தான் போகச் சொல்லுராங்க மாமா... ஆனா..." என்று தம்பியை இறக்கிவிட்டு அம்மாவை ஏறயிறங்க பார்த்தாள் செங்கனி.

"நான் அம்மா, அப்பாகிட்ட சொல்லிக்கிறேன். நீ பள்ளிக்கூடம் போறயா? " என்றேன்.

"சரிங்க மாமா " என்று ஆட்டுக்குட்டியை பிடிக்க துள்ளிகுதித்து ஓடினாள் செங்கனி.

செங்கனியை பார்த்தபோது என் தேன்மொழி தான் ஞாபகத்துல வந்தா? மனது பாரமானது... நல்லா மூச்சு இழந்துவிட்டேன் மனபாரம் குறையும் என்று.  ஆனால் பாரம் கூடவே செய்தது.


யார் அந்த தேன்மொழி?  ஏன் இவன் கவலையானான் தேன்மொழியை நினைத்து? தேன்மொழிக்கு என்ன ஆயிற்று?

வளரும்....

புகைப்படம்

எப்போதும் கேமராவுடன் திரிந்தாள்
எல்லோரையும் படம் பிடித்தாள்
கிளிக் கிளிக் சத்தத்துடன்
எதிர்வந்த எவரையும் விடவில்லை
பதறி விலகினர் அவளை பார்த்து
கேமராவை ஒழித்துவைத்தான் அண்ணன்
அடம்பிடிக்க எடுத்து தந்தாள் அம்மா
போஸ் கொடுக்க மறுத்தாள் அக்கா
தன்னை தானே எடுத்துக்கொண்டாள்
நாயை வளைத்து வளைத்து எடுத்தாள்
பட்டாம்பூச்சி படம்பிடிக்க ஓடினாள்
அவள் கேட்டகும் போதெல்லாம்
அப்பா சளைக்காமல் சிரித்தார்
குட்டிப்பெண் பொம்மைகேமராவுக்கு.

விடியா இரவு

நிலவு இல்லாத வானம்
இருட்டு தின்னும் இரவு
மழைவிட்டும் தூறும் மரம்
அணைய துடிக்கும் தெருவிளக்கு

எமனுக்காக காத்திருக்கும் கிழவி
தூரத்தில் குரைக்கும் நாய்
தனியே கத்தும் தவளை
உறக்கம் இல்லா புழுக்கத்தில்
பேரிளம்பெண்.

Saturday, August 27, 2016

விதை நெல் - நெல் மூன்று



விதை நெல் - நெல் ஒன்று.

விதை நெல் - நெல் இரண்டு

"என்ன மாப்புள்ள காலங்காத்தால கோயில் மரத்தடியில ஒக்காந்து இருக்க" மாட்டைப் பிடித்துக்கொண்டு ஒழவுக்கு போன புளிமூட்ட மாமா கேட்டார்.

"வயிரு சரியில்ல வெளிப்பக்கம் வந்தேன்.... அப்படியே குளிச்சுட்டு வீட்டுக்கு போகனும் மாமா" என்று சமாளித்தேன்.

பயிர மாடு மேயக்கூடாதுன்னு வாக்கூடு  போட்டு உழவு கலப்பைய கோட்ஏறு பூட்டி தும்பகயிறை இழுத்துப்பிடித்து மாடுக்கு ஈடு கொடுத்து நடந்தார் பளிமூட்ட மாமா.

நெல் நடாத இடங்களில் குதுரவள்ளி விதைக்க மாமா போறாரன்னு நினைக்கிறேன்.

நான் சின்னப்பையனா இருந்தப்போ ஊர்முழுக்க குதுரவள்ளி தான் வெதப்பாங்க... இப்ப எல்லாரும் நெல்லுக்கு மாறிட்டாங்க.  நெல்லு நட முடியாத இடங்கள்ள மட்டும் இப்ப குதுரவள்ளி வெதைக்கிறாங்க. குதுரவள்ளிக்கு அவ்வளவாக தண்ணி தேவையில்ல. கருசகாட்டுல வானம்பாறியக்கூட வெதைக்கலாம்.

நெல்லுக்கு மூனு களை எடுக்கனும் ரெண்டு மருந்து அடிக்கனும் ஆனா குதுரவள்ளி வெதச்சா போதும் களையோ எடுக்கவோ மருந்தோ அடிக்கவோ வேணாம்.

குதுரவள்ளிச்சோறு கருவாட்டு கொளம்பு ருசி வாயில இன்னும் அப்படியே இருக்கு. ஏன் எல்லாரும் நெல்லுக்கு மாறினாங்கா தெரியல.

ஒருவேளை நெல்லு பணப்பயிர் அதனால் தான் எல்லாரும் மாறினாங்களா என்னவோ. ஆனா நெல்லுக்கு மூனு ஒழவு அப்பறம்  கொளமிதிக்கனும் பரம்படிக்கணும் ஒரு ஏக்கருக்கு ஆறு ஏழு பொம்பள ஆளு நடவு கூலி இருக்கு, நடவுக்கு முன்ன களப்புஉரம் போடனும், மூனு களை எடுக்கனும்.  அதுகூட பரவாயில்ல நித்தம் தண்ணி பாச்சனும் தண்ணி கரண்டு பில்லு அப்படி இப்படின்னு வரவு செலவு கணக்கு பண்ணாங்கனா எனக்கு என்னமோ குதுரவள்ளி லாபகரமான விவசாயமாக தெரிந்தது. நெல்லுக்கு நடவு, அறுவடை, களை எடுக்க கூலி. மருந்து, உரம் எல்லாம் சேர்த்தால் ஒன்றுமே மிஞ்சாது.

சாமை, கம்பு, செவப்பு சோளம், கேப்பை, தினை, வெள்ள சோளம் எல்லாம் அரிதாகிக் கொண்டிருந்தது. இது எல்லாம் இந்த நிலத்தோட பயிர். நெல்லு தஞ்சாவூர், திருச்சி, சின்னமனூர் மாதரி ஆத்து பாசனம் உள்ள இடங்கள்ள போட வேண்டிய பயிர். அங்க நெல்ல தவிர மத்த வெள்ளம போட முடியாது. அவங்கள பாத்து இவங்க ஏன் மாறினாங்களோ தெரியல.

கேப்பை எல்லாம் கார்த்திகை மாதம் நட்டா மார்கழி பனியில வளர்ந்து குறுத்தள்ளியிரும் ஒரு தண்ணியில பயிர அறுக்கலாம். கம்பு, சோளம் எல்லாம் ஆடி மாசம் வெதச்சா அதுவா வளரும். அறுக்க மட்டும் காட்டுக்கு போனா போதும். சரியா தொன்னூறு நாள் புரட்டாசி மழைக்கு முன்னாடி கதிர் அறுக்களாம்.

மாரியம்மன், முத்தாலம்மன்  கோயில் திருவிழாவுக்கு தினை மாவு இடுச்சு மாவிளக்கு எடுப்பாங்க. தினைமாவு அவ்வளவு ருசியா இருக்கும். வெள்ளம் கலக்காம தின்னாலே இனிப்பா இருக்கும்.

"தேனும் தினைமாவும் கலந்துனக்கு நான் தருவேன் சங்கத்தமிழ் மூன்றும்"  அவ்வை பாட்டி பாடுனாங்க.

தேனும் தினைமாவும் எல்லா வைட்டமின் இருக்காம்.... குழந்தைகளுக்கு அவ்வளவு நல்ல உணவாம். ஆன உலகம் ஹார்லிக்ஸ் பூஸ்ட்ன்னு போயிக்கிட்டு இருக்கு.

நம்ம ஏதாவது சொன்ன படிச்சவன் பாட்ட கொடுத்தான்..... எழுதுனவன் ஏட்டக்கெடுத்தான்னு ஏளனம் செய்வார்கள். எங்கப்பாவே என்ன ஒதப்பபாரு.

இப்ப யாரும் தினை மாவு இடிக்கிறது இல்ல.. எல்லாரும் அரிசி மாவு தான். எல்லாத்துலையும் அரிசி. கேப்பக்களி, வெள்ளச்சோளச்சோறு, குதுரவள்ளி சோறு, கம்மங்கூழு. அரிசி எல்லத்தையும்  புறம்தள்ளியது. வீடுகளை விட்டு பல உணவு வெளியேறியது. அரிசி ஒரு பெருமையின் அடையாளமாக மாறத்தொடங்கியது. அதுல என்ன பெருமையோ தெரியல.

வரும் வாரங்களில் நெல் வளரும்....

Friday, August 19, 2016

விதை நெல் - நெல் இரண்டு

விதை நெல் - நெல் ஒன்று.

அங்கிருந்து நகர்ந்த நான் காலாற நடந்தேன். நான் அப்படி சொல்லி இருக்க கூடாது. எனக்கு கண்டிப்பாக தெரியும். அந்த கேள்வி ஆத்தாளை கஷ்டப்படுத்தும் என்று இருந்தும் ஏன் கேட்டேன். வருத்தமாக இருந்தது.

சுயநினைவு வந்தபொது வெகுதூரம் வந்திருந்தேன். ஊருக்கு வெளியே இருந்த சிறிய ஓடையின் கரையில் சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தேன் மறுகரையை பார்த்துக்கொகொண்டு. உடனே வீட்டுக்கு போக மனம் வரவில்லை. அந்த ஓடைக்கு நடுவே ஒரு அய்யனார் கோவில் இருக்கு. அங்கு போய் கொஞ்ச நேரம் தனியா இருக்கனும் போல இருந்தது. கரையில் இருந்து இறங்கி கோவிலை நோக்கி நடந்தேன்.

அது ஆற்றுக்கு நடுவே இருக்கும் கோவில். இந்த ஆற்றில் தண்ணீர் புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் மட்டும் ஓடும். அதும் கெண்டைக்கால் அளவுக்குத்தான் ஓடும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகா இருக்கும். இது மார்கழி மாதம் ஓடையில் தண்ணீர் இல்லை ஆனால் மணல் ஈரமாக இருந்துது. ஒரு இரண்டு அடி தோண்டுனா தண்ணீ வரும். செருப்ப கழட்டி கையில் எடுத்துக் கொண்டு வெறும் காலில் நடந்தேன். வெறும் காலில் நடக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இதே ஓடையில் நாள் முழுக்க வெளையாண்டு இருக்கேன். இன்னக்கி ஒரு பத்து அடி வெறும் காலில் நடக்க முடியல. இத்தனைக்கும் பண்ணிரெண்டாவது படிக்குற வரைக்கும் செருப்பு போட்டது இல்ல இந்த மூணு வருசம் தான் செருப்பு போடுறேன். அதுக்குள்ள பாதம் தாங்கல.

கோவிலை ஒட்டிய ஆலமரத்தடியில் அமர்ந்தேன். ஆலமரத்தில் மணியும் அறுவாலும் நேர்த்திக்கடனுக்கு அடித்து தொங்க விட்டிருந்தனர். உபயமும் பேரும் துறு ஏறி இருந்தது. மேற்கூரை இல்லாத சுற்றுச்சுவர் மட்டும் உள்ள கோவில். செங்கலால் அடுக்கப்பபட்டு மண் பூசியமேடை அதில் ஒரு சிறிய அலமாறி எண்ணெய் விளக்கு ஏற்ற. வெளியே இரண்டு பெரிய குதிரை நிற்க உள்ள கம்பிரமாக ஒரு கையில் வெட்ட அருவா மறுகையில் ஆளுயர வேல்கம்பு முறுக்கிய மீசை கனல் தெறிக்கும் கண்ணுமாய் ஊரைக் காக்கும் அய்யனார் நின்றுகொண்டிருந்தார். ஊரைக் காக்கும் அய்யனார் அவரை காக்க ஒரு கூரையில்லை. ஆடி காத்திலும் பங்குனி வெயிலும் கார்த்திகை மழையிலும் ஊரை காத்து நின்றார் அய்யனார்.

என் இந்த வேறுபாடு கடவுள்களுக்குள் என்று தோன்றியது. யோசித்து பார்த்ததில் எந்த காவல் தெய்வத்திற்கும் கோவிலில் கூரையில்லை. நித்தியகால பூசையில்லை. வருடத்தில் ஒரு தடவை பொங்கல் படையலுடன் முடித்துக்கொள்வர். அப்புறம் பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை. யாராவது வெளியூர் போனா எல்லையில் இருக்கும் சாமிக்கு ஒரு தேங்காய் உடைத்து விட்டு செல்வார்கள். அய்யனார் கூடவே சென்று பத்தரமா திரும்பி கொண்டு வருவதாக நம்பிக்கை. ஒருவேளை எங்க மாமாவின் மகன் தேங்காய் உடைக்காமல் சென்னைக்கு போயிருப்பாரோ? அதான் ஊருக்கு திரும்பி வரவே இல்லையோ?

திரும்பவும் ஆத்தாவும்... ஆத்தாவின் அழுகை மனதுக்குள் வந்தது. வருடங்கள் சில உருண்டு ஓடிவிட்டது இருந்தும் அவள் அழுகை மட்டும் ஓய்ந்த பாடில்லை. மாமாவின் மேல் கோவமும் வருத்தமும் மாறி மாறி வந்தது எனக்கு.

எங்க தோட்டத்துக்கு இந்த கோவில கடந்து தான் போகணும். அப்ப நான் சின்னபையன் நானும் எங்க ஆத்தா கூட தோட்டத்துக்கு போவேன். கோவிலை கடக்கும் போதெல்லாம் எங்க ஆத்தா "ஊர காத்த அய்யனாரே என் பிள்ளைகளுக்கு கை கால் சொகத்த கொடு... என் மகள என் அண்ண வீட்டுல வெளக்கெத்த வையு" வேண்டிக்கொள்வாள். ஊரைக் காக்கும் அய்யனார் என் ஆத்தாவின் நேத்திக்கடனை காக்க முடியவில்லை.

தொடரும்......

Sunday, March 6, 2016

குற்றப்பரம்பரை ஒரு பார்வை

குற்றப்பரம்பரையில் இருந்து முழுதும் மீழாதா பயணத்தின் மிச்சம். 
ஆம்... அதன் பாதிப்பில் இருந்து வெளிவராமல் ஒரு பதிவு.

வேல ராமமூர்த்தியை மதயானைக்குட்டம் பிரஸ் மீட் யு ட்யூப்-ல்  பார்த்தேன். அங்கு குற்றப்பரம்பரை குறித்த கேள்வி வந்தது. படிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது. நான் அமெரிக்காவில் இருந்ததால் டிஜிட்டல் வேர்சன் கிடைக்கவில்லை. 

நான் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மட்டுமே படித்திருக்கிறேன். படிப்பது குறைந்து விட்டது காரணம் வேலைப்பளு என்று நினைத்துக்கொண்டேன். அது உண்மையில்லை. 

விடுமுறைக்கு ஊருக்கு போனபோது வேல ராமமூர்த்தி அய்யாவின் பட்டது யானை, குற்றப்பரம்பரை தேடித்தேடி வாங்கினேன். பட்டத்துயானை விமானத்திலே படிக்க ஆரம்பித்து விட்டேன்.

ரனசிங்கம் மாயழகி முழுவதும் என்னை ஈர்த்துக்கொண்டனர். உண்மையில் துரைசிங்கம் திரும்பி வருவான் நம்ப ஆரம்பித்துவிட்டேன். 

ஒரு நாள் இடைவெளிவிட்டு குற்றப்பரம்பரை ஆரம்பித்தேன். நானும் வெய்யன்னவின் கூட்டதில் ஒருவனாகிப்போனேன். என் கிராமம் மேற்கு தொடர்ச்சி அருகில் உள்ள கடைசி ஊர். கதையில் வரும் இடங்கள் எங்க ஊரையும் என் மக்களை கண்முன் கொண்டு வந்தது.

கூழனி கிழவி எங்க அப்பத்தாவை ஞாபகப் படுத்தின்னால்.
எங்க ஊர் கம்மாயும் ஊரனியும் கண்முன் வந்து போனது.
நரிவேலும் வையாபுரியும் என் ஊரின் மக்களாக தெரிந்தார்கள்.

அன்னமயிலை காதலித்தேன். சிட்டு என் பள்ளிபருவத்து சிட்டுகளை நினைவு படுத்தியது.

பள்ளத்தாக்கு ஏனோ சம்மந்தமே இல்லாமல் grand canyon (http://grandcanyon.com/) என் நினைவில் வந்து போனது. அது வேல அய்யாவின் வெற்றியாகவே கருதுகிறேன்.

கெடவெட்டு, கறிச்சோறு, பட்டியகல்லு, ஒலவுகட்டி எல்லாம் ஒத்தயடி பதை புழுதியாக என்னோடு ஒட்டிக்கொண்டது. சிட்டுபோல் ஊரனியில் குளித்தாலும் போகவில்லை. அது புழுதி இல்லை என் ரத்தம் என்று தெரிந்தது.

என் மண்ணை விட்டு வெளியே வந்த சேதுவாக புழுங்கிக் கொண்டிருக்கிறேன். 

தென்மாவட்டத்தில் உள்ள எல்லோரும் படிக்கவேண்டிய பாடமாக பார்க்கிறேன்.

குற்றப்பரம்பரை திரையில் காண காத்திருக்கிறேன். 

வேலா அய்யாவின்  குருதி ஆட்டம் புத்தகம் முடித்து வெளியட காத்திருக்கிறேன்.