வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Saturday, August 27, 2016

விதை நெல் - நெல் மூன்று



விதை நெல் - நெல் ஒன்று.

விதை நெல் - நெல் இரண்டு

"என்ன மாப்புள்ள காலங்காத்தால கோயில் மரத்தடியில ஒக்காந்து இருக்க" மாட்டைப் பிடித்துக்கொண்டு ஒழவுக்கு போன புளிமூட்ட மாமா கேட்டார்.

"வயிரு சரியில்ல வெளிப்பக்கம் வந்தேன்.... அப்படியே குளிச்சுட்டு வீட்டுக்கு போகனும் மாமா" என்று சமாளித்தேன்.

பயிர மாடு மேயக்கூடாதுன்னு வாக்கூடு  போட்டு உழவு கலப்பைய கோட்ஏறு பூட்டி தும்பகயிறை இழுத்துப்பிடித்து மாடுக்கு ஈடு கொடுத்து நடந்தார் பளிமூட்ட மாமா.

நெல் நடாத இடங்களில் குதுரவள்ளி விதைக்க மாமா போறாரன்னு நினைக்கிறேன்.

நான் சின்னப்பையனா இருந்தப்போ ஊர்முழுக்க குதுரவள்ளி தான் வெதப்பாங்க... இப்ப எல்லாரும் நெல்லுக்கு மாறிட்டாங்க.  நெல்லு நட முடியாத இடங்கள்ள மட்டும் இப்ப குதுரவள்ளி வெதைக்கிறாங்க. குதுரவள்ளிக்கு அவ்வளவாக தண்ணி தேவையில்ல. கருசகாட்டுல வானம்பாறியக்கூட வெதைக்கலாம்.

நெல்லுக்கு மூனு களை எடுக்கனும் ரெண்டு மருந்து அடிக்கனும் ஆனா குதுரவள்ளி வெதச்சா போதும் களையோ எடுக்கவோ மருந்தோ அடிக்கவோ வேணாம்.

குதுரவள்ளிச்சோறு கருவாட்டு கொளம்பு ருசி வாயில இன்னும் அப்படியே இருக்கு. ஏன் எல்லாரும் நெல்லுக்கு மாறினாங்கா தெரியல.

ஒருவேளை நெல்லு பணப்பயிர் அதனால் தான் எல்லாரும் மாறினாங்களா என்னவோ. ஆனா நெல்லுக்கு மூனு ஒழவு அப்பறம்  கொளமிதிக்கனும் பரம்படிக்கணும் ஒரு ஏக்கருக்கு ஆறு ஏழு பொம்பள ஆளு நடவு கூலி இருக்கு, நடவுக்கு முன்ன களப்புஉரம் போடனும், மூனு களை எடுக்கனும்.  அதுகூட பரவாயில்ல நித்தம் தண்ணி பாச்சனும் தண்ணி கரண்டு பில்லு அப்படி இப்படின்னு வரவு செலவு கணக்கு பண்ணாங்கனா எனக்கு என்னமோ குதுரவள்ளி லாபகரமான விவசாயமாக தெரிந்தது. நெல்லுக்கு நடவு, அறுவடை, களை எடுக்க கூலி. மருந்து, உரம் எல்லாம் சேர்த்தால் ஒன்றுமே மிஞ்சாது.

சாமை, கம்பு, செவப்பு சோளம், கேப்பை, தினை, வெள்ள சோளம் எல்லாம் அரிதாகிக் கொண்டிருந்தது. இது எல்லாம் இந்த நிலத்தோட பயிர். நெல்லு தஞ்சாவூர், திருச்சி, சின்னமனூர் மாதரி ஆத்து பாசனம் உள்ள இடங்கள்ள போட வேண்டிய பயிர். அங்க நெல்ல தவிர மத்த வெள்ளம போட முடியாது. அவங்கள பாத்து இவங்க ஏன் மாறினாங்களோ தெரியல.

கேப்பை எல்லாம் கார்த்திகை மாதம் நட்டா மார்கழி பனியில வளர்ந்து குறுத்தள்ளியிரும் ஒரு தண்ணியில பயிர அறுக்கலாம். கம்பு, சோளம் எல்லாம் ஆடி மாசம் வெதச்சா அதுவா வளரும். அறுக்க மட்டும் காட்டுக்கு போனா போதும். சரியா தொன்னூறு நாள் புரட்டாசி மழைக்கு முன்னாடி கதிர் அறுக்களாம்.

மாரியம்மன், முத்தாலம்மன்  கோயில் திருவிழாவுக்கு தினை மாவு இடுச்சு மாவிளக்கு எடுப்பாங்க. தினைமாவு அவ்வளவு ருசியா இருக்கும். வெள்ளம் கலக்காம தின்னாலே இனிப்பா இருக்கும்.

"தேனும் தினைமாவும் கலந்துனக்கு நான் தருவேன் சங்கத்தமிழ் மூன்றும்"  அவ்வை பாட்டி பாடுனாங்க.

தேனும் தினைமாவும் எல்லா வைட்டமின் இருக்காம்.... குழந்தைகளுக்கு அவ்வளவு நல்ல உணவாம். ஆன உலகம் ஹார்லிக்ஸ் பூஸ்ட்ன்னு போயிக்கிட்டு இருக்கு.

நம்ம ஏதாவது சொன்ன படிச்சவன் பாட்ட கொடுத்தான்..... எழுதுனவன் ஏட்டக்கெடுத்தான்னு ஏளனம் செய்வார்கள். எங்கப்பாவே என்ன ஒதப்பபாரு.

இப்ப யாரும் தினை மாவு இடிக்கிறது இல்ல.. எல்லாரும் அரிசி மாவு தான். எல்லாத்துலையும் அரிசி. கேப்பக்களி, வெள்ளச்சோளச்சோறு, குதுரவள்ளி சோறு, கம்மங்கூழு. அரிசி எல்லத்தையும்  புறம்தள்ளியது. வீடுகளை விட்டு பல உணவு வெளியேறியது. அரிசி ஒரு பெருமையின் அடையாளமாக மாறத்தொடங்கியது. அதுல என்ன பெருமையோ தெரியல.

வரும் வாரங்களில் நெல் வளரும்....

Friday, August 19, 2016

விதை நெல் - நெல் இரண்டு

விதை நெல் - நெல் ஒன்று.

அங்கிருந்து நகர்ந்த நான் காலாற நடந்தேன். நான் அப்படி சொல்லி இருக்க கூடாது. எனக்கு கண்டிப்பாக தெரியும். அந்த கேள்வி ஆத்தாளை கஷ்டப்படுத்தும் என்று இருந்தும் ஏன் கேட்டேன். வருத்தமாக இருந்தது.

சுயநினைவு வந்தபொது வெகுதூரம் வந்திருந்தேன். ஊருக்கு வெளியே இருந்த சிறிய ஓடையின் கரையில் சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தேன் மறுகரையை பார்த்துக்கொகொண்டு. உடனே வீட்டுக்கு போக மனம் வரவில்லை. அந்த ஓடைக்கு நடுவே ஒரு அய்யனார் கோவில் இருக்கு. அங்கு போய் கொஞ்ச நேரம் தனியா இருக்கனும் போல இருந்தது. கரையில் இருந்து இறங்கி கோவிலை நோக்கி நடந்தேன்.

அது ஆற்றுக்கு நடுவே இருக்கும் கோவில். இந்த ஆற்றில் தண்ணீர் புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் மட்டும் ஓடும். அதும் கெண்டைக்கால் அளவுக்குத்தான் ஓடும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகா இருக்கும். இது மார்கழி மாதம் ஓடையில் தண்ணீர் இல்லை ஆனால் மணல் ஈரமாக இருந்துது. ஒரு இரண்டு அடி தோண்டுனா தண்ணீ வரும். செருப்ப கழட்டி கையில் எடுத்துக் கொண்டு வெறும் காலில் நடந்தேன். வெறும் காலில் நடக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இதே ஓடையில் நாள் முழுக்க வெளையாண்டு இருக்கேன். இன்னக்கி ஒரு பத்து அடி வெறும் காலில் நடக்க முடியல. இத்தனைக்கும் பண்ணிரெண்டாவது படிக்குற வரைக்கும் செருப்பு போட்டது இல்ல இந்த மூணு வருசம் தான் செருப்பு போடுறேன். அதுக்குள்ள பாதம் தாங்கல.

கோவிலை ஒட்டிய ஆலமரத்தடியில் அமர்ந்தேன். ஆலமரத்தில் மணியும் அறுவாலும் நேர்த்திக்கடனுக்கு அடித்து தொங்க விட்டிருந்தனர். உபயமும் பேரும் துறு ஏறி இருந்தது. மேற்கூரை இல்லாத சுற்றுச்சுவர் மட்டும் உள்ள கோவில். செங்கலால் அடுக்கப்பபட்டு மண் பூசியமேடை அதில் ஒரு சிறிய அலமாறி எண்ணெய் விளக்கு ஏற்ற. வெளியே இரண்டு பெரிய குதிரை நிற்க உள்ள கம்பிரமாக ஒரு கையில் வெட்ட அருவா மறுகையில் ஆளுயர வேல்கம்பு முறுக்கிய மீசை கனல் தெறிக்கும் கண்ணுமாய் ஊரைக் காக்கும் அய்யனார் நின்றுகொண்டிருந்தார். ஊரைக் காக்கும் அய்யனார் அவரை காக்க ஒரு கூரையில்லை. ஆடி காத்திலும் பங்குனி வெயிலும் கார்த்திகை மழையிலும் ஊரை காத்து நின்றார் அய்யனார்.

என் இந்த வேறுபாடு கடவுள்களுக்குள் என்று தோன்றியது. யோசித்து பார்த்ததில் எந்த காவல் தெய்வத்திற்கும் கோவிலில் கூரையில்லை. நித்தியகால பூசையில்லை. வருடத்தில் ஒரு தடவை பொங்கல் படையலுடன் முடித்துக்கொள்வர். அப்புறம் பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை. யாராவது வெளியூர் போனா எல்லையில் இருக்கும் சாமிக்கு ஒரு தேங்காய் உடைத்து விட்டு செல்வார்கள். அய்யனார் கூடவே சென்று பத்தரமா திரும்பி கொண்டு வருவதாக நம்பிக்கை. ஒருவேளை எங்க மாமாவின் மகன் தேங்காய் உடைக்காமல் சென்னைக்கு போயிருப்பாரோ? அதான் ஊருக்கு திரும்பி வரவே இல்லையோ?

திரும்பவும் ஆத்தாவும்... ஆத்தாவின் அழுகை மனதுக்குள் வந்தது. வருடங்கள் சில உருண்டு ஓடிவிட்டது இருந்தும் அவள் அழுகை மட்டும் ஓய்ந்த பாடில்லை. மாமாவின் மேல் கோவமும் வருத்தமும் மாறி மாறி வந்தது எனக்கு.

எங்க தோட்டத்துக்கு இந்த கோவில கடந்து தான் போகணும். அப்ப நான் சின்னபையன் நானும் எங்க ஆத்தா கூட தோட்டத்துக்கு போவேன். கோவிலை கடக்கும் போதெல்லாம் எங்க ஆத்தா "ஊர காத்த அய்யனாரே என் பிள்ளைகளுக்கு கை கால் சொகத்த கொடு... என் மகள என் அண்ண வீட்டுல வெளக்கெத்த வையு" வேண்டிக்கொள்வாள். ஊரைக் காக்கும் அய்யனார் என் ஆத்தாவின் நேத்திக்கடனை காக்க முடியவில்லை.

தொடரும்......