வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, August 5, 2010

அப்பா

அப்பா ஒரு தொடர். நேராக இங்கு வந்தவர்கள் அப்பா முதல் மற்றும் இரண்டாம்  வாரத்தை படிக்கவும்.






அம்மா இருந்திருந்தால் எனக்கும் அப்பாவுக்குமான தூரம் குறைந்திருக்கக் கூடும். என் பையன் அவர் கட்டிய வீட்டிலும் அவர் மடியிலும் தவழ்ந்திருப்பான். சம சுயகர்வம் உள்ள இரு ஆண்கள் விட்டுக்கொடுப்பது கடினம் என்றே தோன்றியது. உறவை எளிதாக்க  சில சமயம் பெண் அவசியமகிறாள். ஆனால் அப்பா அம்மாவுக்குமான இடத்தையும் சேர்த்தே நிரப்பியிருந்தார் என் இளமையில்.

புத்தகத்தில் படத்தைக்காட்டி என் பையன் கேட்டான் தாத்தான்னா யாருப்பா? போட்டோ காட்டி இவர்தான் தாத்தா என்றேன். ஏம்ப்பா நம்மாகூட இல்ல? எனக்கு பதில்சொல்ல தெரியவில்லை. அப்பா கிட்ட சொல்லணும் உங்களை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை என் பையனுக்கும் சொல்லுங்கள் என்று.

தூரத்தில் அப்பா. நடை தளர்ந்திருந்தது. என் கண்ணில் குபுக்கென்று கண்ணீர் வந்தது. அந்தப்பக்கம் திரும்பி துடைத்துக்கொண்டேன். நான் அழுதால் அப்பாவுக்கு பிடிக்காது. ஓடிப்போய் அப்பாவிடமிருந்து பையை வாங்கினேன். அவர் என்னை அங்கு எதிபார்த்திருக்கவில்லை.

"நீ எப்படி இங்க? நான்கூட உன்ன பார்த்து பேசனுமுன்னு இருந்தேன். உன்னை கேட்காம இந்த வீட்ட உங்க அண்ணனுக்கு எழுதிக்கொடுத்தது என் தப்புதான். உனக்கும் சமஉரிமை அந்தவீட்டில் உண்டு. உன்னைப்போல் இல்லை, அவன் இப்ப ரெம்ப கஷ்ட்டபடுறான், அவனுக்குன்னு ஏதாவது வேணும் என்று செய்தேன். அவன்கூட உன்னை கேட்க வேண்டும் என்றான். நான்தான் வற்புறுத்தி இதை செய்தேன். உனக்கு புரியும்."

"இல்லப்பா.. நான் அதுக்கு வரலே... உங்ககளை வீட்டுக்கு கூப்பிட்டுட்டு போகலாம்முனு வந்தேன். நீங்க எங்க கூடவே இருந்திருங்கப்பா"

"இல்லடா அது சரிவராது. அண்ணனுக்குகூட நான் ஊருக்கு போவதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் நான் கிராமத்துக்கு  போவது என்று முடிவு செய்து விட்டேன்."

"அப்பா பழசெல்லாம் நெனச்சுக்கிட்டு வரலேன்னு சொல்லவேண்டாம். அன்று உங்கள் நம்பிக்கையை உடைத்ததற்கு மன்னிக்கணும்."

"என்னைக்கு நான் சொன்னத பொய்யாக்கி வாழ்க்கையில ஜெயிச்சிட்டையோ. அன்னைக்கே உன்னை நான் மன்னிச்சுட்டேன். ஆனாலும் பாதி இரவில் ஒரு பொண்ணு கூட இருந்தும் உன்னை வீட்டை விட்டு அனுப்பியிருக்கக் கூடாது. அந்த பொண்ணை பார்க்கவே கஷ்ட்டமா இருக்குடா"

"இல்லப்பா... அவளுக்கு உங்கள புரியும்ப்பா... நீங்க வாங்கப்பா உங்கள் வாழ்க்கையை என் பையனுக்கு சொல்லிக்கொடுங்கப்பா..."

"இல்லடா... லீவுக்கு ஊருக்கு உன் பையனை கூட்டிட்டு வா... உன் வேர் எங்கிருந்து வந்தது என்று காட்டு... அவனுக்கு வாழ்க்கையின் எல்லா பக்கமும் புரியும்... என் அப்பா எனக்குன்னு வாங்கிய ஒரு ஏக்கர் நிலம், அந்த ஓட்டு வீடு, என் கடைசி காலத்தை அங்கு கழிக்க விரும்பிறேன். எனக்கு... என் அப்பாவுக்கு... பிடித்த வாழ்க்கையை இப்பவாது வாழறேன். என்னை வற்புறுத்தாதே."

அப்பா ஆட்டோவில் ஏறி அமர்ந்தார். கையசைத்தேன் கலங்கிய கண்களுடன் நான் அழுவது அப்பாவுக்கு பிடிக்காது என்று தெரிந்தும்.

15 comments:

  1. //"இல்லட்டா... லீவுக்கு ஊருக்கு உன் பையனை கூடிட்டு வா... உன் வேர் எங்கிருந்து வந்தது என்று காட்டு... அவனுக்கு வாழ்க்கையின் எல்லா பக்கமும் புரியும்... என் அப்பா எனக்குன்னு வாங்கிய ஒரு ஏக்கர் நிலம், அந்த ஓட்டு வீடு, என் கடைசி காலத்தை அங்கு கழிக்க விரும்பிறேன். எனக்கு... என் அப்பாவுக்கு... பிடித்த வாழ்க்கையை இப்பவாது வாழறேன். என்னை வற்புறுத்தாதே."//

    இதுதான் நிதர்சனம்....

    ReplyDelete
  2. என்னைப்பற்றிய நினைவுகளை நிறைய தூண்டி விட்டது இந்த கதை, வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  3. உன் வேர் எங்கிருந்து வந்தது என்று காட்டு... அவனுக்கு வாழ்க்கையின் எல்லா பக்கமும் புரியும்...//

    அழகான வரிகள்...எழுத்துகள் காட்சி போல தெரிகிறது

    ReplyDelete
  4. அப்பா என்ற அழகான கவிதையை.. உங்கள் கதையின் மூலம் அருமையாக கூறியிருக்கிறீர்கள் ...

    வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  5. அப்பா இந்த சொல்லை உச்சரித்தாலே தெரியும் அதன் வீரியம்

    நமக்கெல்லாம் முதல் ரோல் மாடல் அப்பா தானே :)

    வாழ்த்துக்கள் அண்ணே :)

    ReplyDelete
  6. அருமை நண்பரே!

    ReplyDelete
  7. அருமையான கதை.. யதார்த்தமான முடிவு. மிக நேர்த்தியான நடையில் பல அடி உயர்ந்து நிற்கிறார் அப்பா...

    ReplyDelete
  8. என் அப்பாவுக்கு... பிடித்த வாழ்க்கையை இப்பவாது வாழறேன். //

    உணர்வு பூர்வமா எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  9. சிறப்பாக எழுதி இருக்கீங்க . நல்ல இருக்கு நண்பரே தொடரட்டும் உங்களின் அப்பா பற்றிய பதிவு . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. பீல் குட் ஸ்டோரி முனிஸ்.. வாழ்த்துகள் :)

    ReplyDelete
  11. அருமையான கதையோட்டம்.முடிவு வறட்டு றாங்கிகளுக்குள் உறவு நசிஞ்சு போகாதபடிக்கு அப்பா மகன் உறவை அழகாக்கியிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. யதார்த்தமான முடிவு.
    அப்பாவும் மகனும் தாம் செய்த தவறுக்காக வருந்துவதும் ,அவர் தன் தந்தையை மனதில் இருத்தி ஒரு மகனாக விடை பெறுவதும் அருமையான முடிவு .
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அருமை...

    வாழ்த்துகள் முனியாண்டி!

    //என் அப்பா எனக்குன்னு வாங்கிய ஒரு ஏக்கர் நிலம், அந்த ஓட்டு வீடு, என் கடைசி காலத்தை அங்கு கழிக்க விரும்பிறேன். எனக்கு... என் அப்பாவுக்கு... பிடித்த வாழ்க்கையை இப்பவாது வாழறேன். என்னை வற்புறுத்தாதே."//

    Excellent....

    ReplyDelete